ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதப் பெருமாள் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழா மே 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
வைணவ ஆச்சார்யரான ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2016 சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் தொடங்கி இந்த ஆண்டு மே 1-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் ராமானுஜர் ஜயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கிடாம்பி நாராயணன் சுவாமி உபந்யாசமும், மாலை 5 மணிக்கு ஆயக்குடி குமார் என்கிற அனந்தகிருஷ்ணன் பாகவதரின் பஜனையும் நடக்கிறது. மே 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு ராமானுஜர் மூலவர், உற்சவர்களுக்கு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு கோஷ்டி பாராயணமும், தொடர்ந்து ராமானுஜர் உற்சவமூர்த்தி பூ பந்தல் அலங்கார வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை எம்பெருமானார் நித்ய கைங்கர்ய அறக்கட்டளைத் தலைவர் உமாபதி, நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.