ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப் போட்டியில் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவர் வே.வெற்றிச்செல்வன் முதல் பரிசு பெற்றார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப் போட்டியில், மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மாலை நடைபெறும் சிந்தனை அரங்கில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மாலை நடைபெற்ற சிந்தனை அரங்கில் கவிதைத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, யுஆர்சி பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் செயலர் யு.ஆர்.சி.தேவராஜன் தலைமை வகித்தார். கவிஞர்கள் சிற்பி பாலசுப்பிரமணியம், மு.மேத்தா, முத்துலிங்கம், தணிகைச்செல்வன் ஆகியோர் தங்களது கவிதைகளை வாசித்தனர். மாநில அளவிலான கவிதைப் போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு மூத்த கவிஞர்கள் பரிசு வழங்கினர்.
முதலிடம் பிடித்த திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவர் வே.வெற்றிச்செல்வனுக்கு ரூ. 10,000, ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி மாணவி செ.தமிழரசிக்கு ரூ. 5,000, வேளாளர் மகளிர் கல்லூரி மாணவி சோ.நவீனாவுக்கு ரூ. 3,000
பரிசு வழங்கப்பட்டது.
இதில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், சிங்கப்பூர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.