ஈரோடு மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளிகளில் விளையாட்டு, இலக்கியப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
ஈரோடு மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் விளையாட்டு போட்டி, கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கிவைத்தனர்.
இதேபோல, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் தடகளம், கபடி, கையுந்துப்பந்து, கோகோ உள்ளிட்ட போட்டிகள் தொடக்கிவைக்கப்பட்டன.
உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.