கடும் வறட்சியைக் கருத்தில் கொண்டு கீழ்பவானி கால்வாயில் உயிர்த் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஈரோட்டில் தமாகாவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசனப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாத நிலையில் மக்கள் கடும் வறட்சியால் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அதேபோல, இந்த ஆண்டும் பவானி ஆற்றுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, கடும் வறட்சியைக் கருத்தில்கொண்டு எல்பீபி வாய்க்காலுக்கு உயிர்த் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மத்திய மாவட்ட தமாகா சார்பில் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, மத்திய மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மத்திய மாவட்ட பார்வையாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில இளைஞர் அணித் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மத்திய மாவட்ட துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.