ஈரோடு, கொல்லம்பாளையம், குப்புசாமி காலனியில் உள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயிலில், உலக நலன் கருதி அஷ்டபுஜ துர்காதேவி நவசண்டி மஹா யாகப் பெருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.
தொடக்க நாளான வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி யாகம், நவக்கிரக யாகம், மஹா சுதர்சன யாகம், கோமாதா பூஜை, தீபாராதனை ஆகியன நடைபெற்றன. அதன் பின்னர், வாஸ்து சாந்தி, மிருத்சங்க கிரஹணம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலையில் யாக அலங்காரம், ஸ்ரீ தேவி மாஹாத்மிய பாராயணம், ஆவாஹனம், நவாவரண பூஜை, உபசார பூஜை ஆகியன நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீ சண்டி நவாவரண பூஜை யாகாரம்பம், அத்யாய ஹோமங்கள், பட்டுவஸ்தர சமர்ப்பணம், காலை 10.30 மணிக்கு சுவாசினி கன்யா வடுகபூஜை, மதியம் 1 மணிக்கு ஸ்ரீ சண்டி கலச அபிஷேகம், மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அஷ்டபுஜ துர்காதேவி திருவீதி உலா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு துர்காதேவியை வழிபட்டனர்.