நாமக்கல் மாவட்டம், தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 410 பேர் அரசுப் பேருந்துகளைப் பிடித்து ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.
ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் புத்தக ஆர்வலர்கள், கல்வி நிறுவன நிர்வாகிகள் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கில் தினமும் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 410 பேர் அரசுப் பேருந்துகளில் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் வந்தனர். இங்கு வந்த அவர்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையிலான பேரவை நிர்வாகிகள் வரவேற்பளித்து புத்தக அரங்குக்குள் அனுப்பிவைத்தனர். 5 பேருந்துகளில் 20 ஆசிரியர்கள் துணையுடன் மாணவ, மாணவிகள் வந்தனர்.
இதுகுறித்து, இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், எங்களது பள்ளித் தலைமை ஆசிரியர் அரங்கராசன், ஈரோடு புத்தகத் திருவிழா குறித்து கேள்விப்பட்டவுடன் அரசுப் பேருந்துகளைப் பிடித்து மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும்படி உத்தரவிட்டார். அதன்படி, இங்கு வந்துள்ளோம். முதல் முறையாக இங்கு வந்துள்ள மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் இக்கண்காட்சிக்கு வர முடிவு செய்துள்ளோம் என்றனர்.