மாரத்தான் போட்டி: கோபி கலைக் கல்லூரி மாணவி முதலிடம்
கோபி கலை அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான மாரத்தான் போட்டியில் கோபி கல்லூரி மாணவி பி.மோகனபிரியா முதலிடம் பெற்றார்.
இப்போட்டிக்கு, கல்லூரி முதல்வர் ஆர்.செல்லப்பன் தலைமை வகித்தார். இரு பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், முதலில் ஆண்களுக்கு கல்லூரி விளையாட்டுத் திடலில் இருந்து கோவை பிரிவு வரை 12.5 கிலோ மீட்டர் தொலைவும், பெண்களுக்கு கல்லூரி விளையாட்டுத் திடலில் இருந்து போடிசின்னாம்பாளையம், அண்ணாநகர் வரையில் 8 கிலோ மீட்டர் தொலைவும் நிர்ணயிக்கப்பட்டது.
இப்போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை, கோபி கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர், செயலர் எம்.தரணிதரன் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
போட்டி முடிவுகள்: ஆண்கள் பிரிவில், பொள்ளாச்சி எஸ்.டி.சி கல்லூரி மாணவர் எம்.அருண்பிரபு முதலிடமும், அதே கல்லூரியைச் சேர்ந்த எம்.ரவிகுமார் இரண்டாமிடமும், கோவை வி.எல்.பி கல்லூரியைச் சேர்ந்த ஆர்.அபிலேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில், கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவி பி.மோகனபிரியா முதலிடமும், கோவை என்.ஜி.பி. கல்லூரி மாணவி வி.சோனியா இரண்டாம் இடமும், கோவை நிர்மலா கல்லூரி மாணவி எஸ்.சந்தனமாரி மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துக்கான சான்றிதழ்களும், பரிசும் , கோபி கலைக் கல்லூரியின் 50-ஆவது பொன்விழா ஆண்டு பரிசுகளையும் கல்லூரிச் செயலர் எம்.தரணீதரன் வழங்கினார். பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லூரி நிர்வாகம், கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் எம்.கிருஷ்ணமூர்த்தி, உடற்கல்வித் துறை பயிற்சிப் பணியாளர் பி.சீதாலட்சுமி, உடற்கல்வித் தகுதி பயிற்சிப் பணியாளர் லோ.கோகிலா ஆகியோர் செய்திருந்தனர்.