அந்தியூர் குருநாத சுவாமி கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, பிராணி வதைத் தடுப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தியூர் குருநாத சுவாமி கோவில் தேர்த் திருவிழாவையொட்டி பிரம்மாண்டமான கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் கவுந்தப்பாடி ஜெயம் பிராணி நல அறக்கட்டளை சார்பில் பிராணி வதைத் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில், அறக்கட்டளை இயக்குநர் ஜெயலட்சுமி வரவேற்றார். நிறுவனத் தலைவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இயற்கை விவசாயம், பிராணிகள் நலன், பிராணிகள் துன்புறுத்தப்படும் விதம், கால்நடை வளர்ப்பின் மூலம் உயரும் கிராமப் பொருளாதாரம், பார்த்தீனியத்தை உரமாக மாற்றிப் பயன்படுத்தும் முறை போன்றவை அடங்கிய கையேடுகளை அறக்கட்டளை சார்பில் கால்நடை வளர்ப்போருக்கும், வாங்குபவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.
மேலும், முகாமில் பசு வளர்ப்பு முறைகள் குறித்தும், நாட்டு மாட்டுப் பாலில் உள்ள நன்மைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. காங்கயம், பர்கூர், ஷாஹிவால், கிர், தார்பார்க்கர், சிவப்பு சிந்தி, கான்க்ரùஜ், கிருஷ்ணா, ராத்தி போன்ற நாட்டுப் பசுக்களில் இருந்து பெறப்படும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் அவற்றைப் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.
முகாமில், மான், மயில், காட்டுப் பன்றி, வரையாடு, சிட்டுக் குருவிகளை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும், லாரிகளில் அளவுக்கு அதிகமான பசுக்களை ஏற்றி செல்வதற்குத் தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இதில், அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர்கள் பாபு, சசிகுமார், உமாமகேஷ்வரி, வழக்குரைஞர் விஜயகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.