ஈரோடு புத்தகத் திருவிழாவில் ரூ. 250-க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் நூல் ஆர்வலர் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு புத்தகத் திருவிழா வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஆகஸ்ட் 4 முதல் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவைக் காண ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்துசெல்கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் கடந்த ஆண்டு வாங்கிய புத்தக சேமிப்பு உண்டியலைக் கொண்டு வந்து அதை உடைத்து அதில் இருக்கும் பணத்தைக் கொண்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு புத்தகங்களை வாங்கிச் செல்லும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நூல் ஆர்வலர் சான்றிதழை மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கி வருகிறது. வாங்கிய புத்தகங்களின் மொத்த மதிப்பு ரூ. 250-க்கு மேல் இருந்தால் அதை வாங்கிய மாணவ, மாணவிகளுக்கு நூலக ஆர்வலர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தங்களது பெயர், பள்ளியின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை தெரிவித்து நூலக ஆர்வலர் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.