மொடக்குறிச்சி அருகே சாவடிப்பாளையம்புதூர், அம்மன் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளைக் காலி செய்ய 2 மாதகாலம் அவகாசம் தர வேண்டும் என ஆட்சியரிடம் சனிக்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் அளித்த மனு விவரம்:
அம்மன் நகரில் சாலையோரத்தில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் நாங்கள் வசித்து வருவதாகக் கூறி எங்களை அங்கிருந்து உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்றும், வீடுகளை இடித்து அகற்றப்படும் என்றும், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். மேலும், பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள், வயதான பெரியவர்களும் பலர் உள்ளதால் உடனடியாக வீடுகளைக் காலி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, வீடுகளைக் காலி செய்ய 2 மாதகால அவகாசம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மனு அளிக்கும்போது பா.ம.க. மாநில துணைத் தலைவர் என்.ஆர்.வடிவேல் உடனிருந்தார்.