பெருந்துறை, வெள்ளோடு ஆகிய இரு இடங்களில், வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளைத் திருடிய 5 பேரை பெருந்துறை போலீஸார் கைது செய்தனர்.
பெருந்துறை, அன்னை கார்டனில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி. இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது, சுந்தரமூர்த்தியின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
இதேபோல, வெள்ளோடு, முருகன் நகரைச் சேர்ந்தவர் சத்தியன். இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது, சத்தியன் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ஒன்னரை பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து, பெருந்துறை, வெள்ளோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பங்கள் தொடர்பாக, ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டி, களனிக்குட்டியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் கணேசன் (49), பாலக்காட்டை அடுத்த வாளையார், பாம்புபாறையைச் சேர்ந்த தர்மன் மகன் ஏசுதாஸ் (33), மன்னார்குடியை அடுத்த முல்லை நகரைச் சேர்ந்த இருதயராஜ் மகன்கள் வின்சென்ட் (28), அலெக்சாண்டர் (29), திருவாரூரை அடுத்த முகுந்தனூரைச் சேர்ந்த ராயப்பன் மகன் ஆரோக்கியதாஸ் (40) ஆகியோரை பெருந்துறை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.