பவானிசாகர் ஒன்றியத்தில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சில பகுதிகளுக்கு வடிகால் வசதி இல்லை. இதனால், சிலர் தங்களின் வீடுகளின் முன்புறம் குழிகள் தோண்டி அதில் கழிவுநீரை தேக்கி வைக்கின்றனர். இதையடுத்து, அப்பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பவானிசாகர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். பவானிசாகர் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளுக்கும் கொசு ஒழிப்பு இயந்திரம் சொந்தமாக வாங்கித் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி மாலை நேரம் மட்டும் வடிகால்கள், கழிவு நீர் தேங்கும் இடங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் புகை அடிக்க அனைத்து ஊராட்சி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.