பெருந்துறை அருகே இரு சக்கர வாகனம் மீது, ஆட்டோ மோதியதில், கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர், வெள்ளிரவெளி, கிழக்குவீதியைச் சேர்ந்தவர் துரைசாமி (56). கட்டடத் தொழிலாளியான இவர் மனைவி குப்பம்மாள் (49). செவ்வாய்க்கிழமை (டிச.5) பிற்பகலில், தம்பதி இரு சக்கர வாகனத்தில் நசியனூர் சென்றனர்.
பெருந்துறை அருகே உள்ள கோவை - சேலம் புறவழிச் சாலை, காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் சென்றபோது, அவ் வழியாக வந்த மினி ஆட்டோ, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு துரைசாமி உயிரிழந்தார்.
இது குறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.