பெருந்துறை அருகே மிளகாய் வியாபாரி சாவில் நிலவிய மர்மம் விலகியது. கள்ளக் காதலி உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பெருந்துறை, சின்னமடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (68). மிளகாய் வியாபாரியான இவர் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். மறுநாள் பெருந்துறை, சிப்காட், ஓடைக்காட்டூர், மலையாண்டி காட்டுப் பகுதியில் பிணமாகக் மீட்கப்பட்டார்.
இந்நிலையில், தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக, அவர் மகள் மாலதி (42), பெருந்துறை போலீஸில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சாமிநாதனின் செல்லிடப்பேசி பதிவுகளின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். இந்நிலையில், சாமிநாதன் மரணம் தொடர்பாக வரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி முன்னிலையில், இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் செவ்வாய்க்கிழமை (டிச.5) மாலை சரணடைந்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், வின்டெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (55). கணவரை இழந்த நிலையில்
தனியாக வசித்து வந்த இவருக்கும், சாமிநாதனுக்கும் சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி பாப்பாத்தி வீட்டுக்கு சாமிநாதன்
சென்றபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இது குறித்து, பாப்பாத்தி விஜயமங்கலம், வாய்ப்பாடி, மூனாம்பள்ளியில் வசிக்கும், தன் மகன் கிருஷ்ணா (34) மற்றும் சென்னிமலை, ஓட்டப்பாறையைச் சேர்ந்த சம்பந்தி ஈஸ்வரி (55), ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானம் எனக் கருதிய மூன்று பேரும், பிணத்தை மறைக்கத் திட்டமிட்டனர். அதன்படி, சாமிநாதன் மொபெட்டை, பெருந்துறை புதிய பேருந்து நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினர்.
பின்னர், நள்ளிரவில் கிருஷ்ணாவுக்குச் சொந்தமான காரில் பிணத்தை ஏற்றிச் சென்று சிப்காட் அருகே வீசியுள்ளனர்.
இதற்கிடையே சாமிநாதனின் மரணம் குறித்து, போலீஸ் விசாரிப்பதை அறிந்த மூன்று பேரும் வரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி முன்னிலையில் சரணடைந்தனர் என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (டிச.5), மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.