ஊதிய ஊயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் அந்தியூர் - மேட்டூர் பிரிவில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பவானி வட்டக் கிளைத் தலைவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியம், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியம் வழங்க வேண்டும்.
முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1.1.2016 முதல் ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட விடுமுறைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்கத்தின் வட்டப் பொருளாளர் செந்தாமலர், அங்கன்வாடி ஊழியர் சங்கத் தலைவர் பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.