ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதை 6-ஆவது வளைவில் உள்ள மரக்கிளையில் சிறுத்தை படுத்திருப்பதைப் பார்த்த பயணிகள் அதைப் புகைப்படம் எடுத்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தையின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்து உள்ளதாக அண்மையில் வனத் துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதேபோல, புலிகள் எண்ணிக்கை 56-ஐ தாண்டியுள்ளது.
புலிகள் இருக்கும் இடத்தில் சிறுத்தைகள் இருக்காது என்பதால் அதன் வாழ்விடத்தை மாற்றிக் கொள்ளும். இதனால் 2 கி.மீ. தொலைவுள்ள பரப்பளவில் சிறுத்தை தனக்கென இடத்தை தேர்ந்தெடுப்பதால் சிறுத்தையின் நடமாட்டத்தை திம்பம் பகுதியில் அதிக அளவில் காணலாம்.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு மாலை 5.30 மணியளவில் அரசுப் பேருந்து புறப்பட்டது. அதில், ஓட்டுநர் குமரேசன், நடத்துநர் ராஜேந்திரன் உள்ளிட்ட 25 பயணிகள் பயணித்தனர்.
திம்பம் 6-ஆவது வளைவில் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்த மரத்தில் சிறுத்தை படுத்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
சிறுத்தை நீண்ட நேரமாக போகாமல் அதே இடத்தில் இருந்துள்ளது. இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினர் வாகன ஓட்டிகளை அப்புறப்படுத்தினர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து புலிகள் காப்பக இணை இயக்குநர் அருண்லால் கூறியதாவது:
திம்பம் மரக் கிளையில் சிறுத்தை இருந்தது உறுதியாகியுள்ளது. குட்டி சிறுத்தை என்பதால் இரை சாப்பிட்டுவிட்டு எங்கும் நகராமல் அதே இடத்தில் நீண்ட நேரமாகக் காணப்பட்டது. விலங்குகளை மனிதர்கள் தொந்தரவு செய்யக் கூடாது. இதனால், சில நேரங்களில் மனித -விலங்கு மோதல் ஏற்படலாம் என்றார்.