ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் இந்து முன்னணி சார்பில், கோயில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பூசப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட பேச்சாளர் தியாகராஜன் வரவேற்றார். கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கோயிலுக்குச் சொந்தமான 4.22 லட்சம் ஏக்கர் நிலங்கள், கடைகள், வீடுகளில்இருந்து வரும் வாடகை வருமானம் பல கோடி ரூபாய் இருந்தும், தரிசனக் கட்டணம் வாங்குவது ஏன்?. கோயில் சொத்தை கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும்போது தரிசனக் கட்டணத்தை ஏன் ரத்துச் செய்யக் கூடாது. கேரளத்தில் இலவச தரிசனம் சாத்தியமாகும்போது, தமிழகத்தில் ஏன் சாத்தியமாகாது என கேள்விகளை எழுப்பி கோஷமிட்டனர். இதில், 3 சிறுவர்கள் கடவுள் வேடமணிந்து அமர்த்தப்பட்டு இருந்தனர்.
சத்தியில்...: சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் இந்து முன்னணி கட்சியின் வட்டாரத் தலவைர் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோபியில்...: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பு சார்பில், கோபி பேருந்து நிலையத்திலும் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் மோகன், ஈரோடு மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.