பவானியை அடுத்த பூதப்பாடி சிற்றூராட்சிப் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை அருகே பூதப்பாடி சிற்றூராட்சி, எஸ்.பி. கவுண்டனூர், பாலமரத்து கொட்டாய் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 10 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினர்.
அப்பகுதியில், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால், தங்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காலிக் குடங்களுடன் பூதப்பாடி - குருவரெட்டியூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டதன்பேரில் பொதுமக்கள் போராட்டம் கைவிடப்பட்டது.