குறுமைய விளையாட்டு போட்டி தொடக்கம்
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கிழக்கு குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
ஈரோடு, வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2017-2018 ஆம் ஆண்டுக்கான ஈரோடு கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.
இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சின்னுசாமி வரவேற்றார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் தங்கமுத்து, பொருளாளர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஈரோடு கிழக்கு குறுமையத்தைச் சேர்ந்த 32-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீ, 3,000 மீட்டர், 5,000 மீட்டர் ஓட்டப் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி தாண்டுதல், குண்டு ஏறிதல், வட்டு ஏறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாணவர்கள் 14, 17, 19 வயது பிரிவினர்களாக வகைப்படுத்தப்பட்டு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
இதேபோல, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் ஈரோடு, வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.