பெருந்துறை அருகே கோயில் அரச மரம் வேருடன் பெயர்த்து இடமாற்றம் செய்யப்பட்டது.
பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில், விஜயகிரி வேலாயுதசுவாமி கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான செயற்கை குன்று கோயிலாகும். இங்கு பழநிமலை கோயிலைப்போல் மூலவர் சிலை மேற்கு திசை நோக்கி இருப்பது தனிச் சிறப்பாகும். கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோயிலில் புனரமைப்பு பணி தற்போது நடைபெறுகிறது.
மலைக் கோயிலுக்குச் செல்லும் செயற்கை குன்றுக்கு நடுவே 60 வயதான அரசமரம் உள்ளது. மரத்தின் வேர்கள் பரவி வளர்வதால் படிக்கற்கள், குன்று சேதமடைகிறது. இதனால், மரத்தை வேருடன் பெயர்த்து வேறிடத்தில் நட கோயில் நிர்வாகம் முடிவு செய்து, மரத்தை அகற்ற மூலவர் சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டது. உத்தரவு கிடைக்கவே அரச மரத்தைப் பெயர்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பணியில், ஈரோடு சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த15 பேர் ஈடுபட்டனர். மரத்தை இடமாற்றம் செய்ய வசதியாக மரக் கிளைகள் முழுவதும் வெட்டி அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் மூலமாக 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மரம் வேருடன் பெயர்க்கப்பட்டது. பின்னர், கிரேன் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள மாட்டுச் சந்தை பகுதியில் நடப்பட்டது.