பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில், சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 47 பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
கொங்கு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, 23 தங்கப் பதக்கங்கள், 15 வெள்ளிப் பதக்கங்கள், 9 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, 169 புள்ளிகளுடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
19 வயது பிரிவில், ஆர்.ஹேமானந்த்பாபு தனிநபர் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். 17 வயது பிரிவில் கே.கண்ணன் தனிநபர் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜி.சதீஷ்குமார், பி.தட்சிணாமூர்த்தி ஆகியோர், பள்ளித் தலைவர் எம்.கந்தசாமி, தாளாளர் வி.எஸ்.தங்கமுத்து, பொருளாளர் என்.டி.ராஜேந்திரன் ஆகியோரிடம் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றனர்.