மொடக்குறிச்சி ஒன்றியத்தில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி கஸ்பாபேட்டை ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
மொடக்குறிச்சி ஒன்றியம், கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணாநகர் காலனி, நேரு நகர், ஜீவா நகர், அரசு போக்குவரத்து நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு,
பாலிமேடு பகுதியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் குடிநீர்த் தொட்டி மூலம் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாலிமேடு பகுதி மக்கள் தற்போது தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனக் கூறி மற்ற பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் இணைப்பை ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென துண்டித்துவிட்டனர்.
இதனால், நேருநகர், அண்ணாநகர் காலனி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு திங்கள்கிழமை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கஸ்பாபேட்டை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், ஊராட்சி செயலாளர் முருகேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, ஊராட்சி அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரை அலுவலகத்தைத் திறக்க விடாமல் அலுவலக வாசலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, ஊராட்சி செயலாளர் முருகேசன் ஆகியோர் பாலிமேடு பகுதி மக்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால், அவர்கள் மீண்டும் குடிநீர் இணைப்பை வழங்க மறுத்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாலிமேடு பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
பின்னர், அதிகாரிகள், போலீஸாரின் கடும் எச்சரிக்கைக்குப் பின் பாலிமேடு பகுதி மக்கள் தண்ணீர் வழங்க ஒத்துக்கொண்டனர். தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை மீண்டும் இணைத்தனர்.