சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், நேரு நகரில் செயல்பட்டு வரும் மதுக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனு விவரம்:
அரியப்பம்பாளையம், நேரு நகர் பகுதியில் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் சுற்றுப் பகுதிகளில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உழவர் சந்தை, கோயில், சத்தி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவை இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இங்கு செயல்பட்டு வரும் மதுக் கடையால் பெண்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த மதுக் கடையை அகற்றக் கோரி ஜூன் 15-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், பொதுமக்கள் மீது சத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எனவே, அரியப்பம்பாளையத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மதுக் கடையை உடனடியாக அகற்றவும், போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.