தமிழக அரசியலில் ஊழல்வாதிகளை ஒதுக்குவது அவசியம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் திடலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்திரா காந்தி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
வளர்ந்து வரும் 5 வல்லரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற நிலையை அடைய பாடுபட்டவர் இந்திரா காந்தி. நாட்டை பாதுகாப்பதற்காக குடும்பத்துடன் சிறை சென்றிருக்கிறார். இப்பவும் சிலர் சிறைக்குச் செல்கின்றனர். ஊழல் செய்து சிறை சென்றுள்ளனர். தமிழகத்தின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பின் மக்கள் அதிமுகவையே முடக்கிவிடுவார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் மாட்டு இறைச்சிக் கடைகளை மோடி மூடுகிறார். கூலித் தொழிலாளர்களாகிய மக்கள் உடல் சக்திக்கு இறைச்சிகளை சாப்பிட்டு தானே ஆக வேண்டும்.
தமிழகத்தில் ஊழல்வாதிகள் ஆட்சியில் தொடர முயற்சி செய்கின்றனர். ஊழல்வாதிகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார். இதில், மாநிலப் பொருளாளர் நாசே ராமசந்திரன், மாநில துணைத் தலைவர்கள் சண்முகம், நல்லசாமி, மேலிடப் பார்வையாளர்
அப்துல்லா குட்டி, மாவட்டத் தலைவர்கள் ஈ.பி.ரவி (ஈரோடு மாநகர்), சரவணன் (ஈரோடு வடக்கு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.