இளைஞரால் கடத்தப்பட்டதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண் கணவருடன் போலீஸில் தஞ்சமடைந்துள்ளார்.
அறச்சலூர் அருகே, பூந்துறைசேமூர், லிங்ககவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் செளந்தர்யா (21). இவர், மே 11-ஆம் தேதி வடுகபட்டி, புதுவெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி மகன் கவியரசு (27) என்பவரால் கடத்திச் செல்லப்பட்டதாக அறச்சலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சௌந்தர்யாவைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், செளந்தர்யா அரச்சலூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை மாலை தனது கணவருடன் வந்து ஆஜரானார். அப்போது, அவர் கூறுகையில், என்னை யாரும் கடத்தவில்லை. கவியரசும், நானும் காதலித்து வந்தோம். அதனால் திருமணமும் செய்து கொண்டோம். எனவே, எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றார்.
அவரது வேண்டுகோளின்படி, அறச்சலூர் காவல் ஆய்வாளர் ஞானப்பிரகாசம், சௌந்தர்யாவின் பெற்றோரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், செளந்தர்யா பெற்றோருடன் செல்ல மறுத்து தனது கணவருடன் செல்வதாகக் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரது கணவருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.