குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
அம்மாபேட்டை பேரூராட்சியில் அந்தோணிபுரம், இடுமாங்கொட்டாய், கோலக்காரனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் தினக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக போதிய குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
பொதுமக்களிடம் பேச்சு நடத்திய அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் குமார், ஓரிரு நாள்களில் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.