கொடுமுடி அருகே வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட வடக்கு புதுப்பாளையத்தில் அமைந்துள்ள மதுக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
வடக்கு புதுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மதுக் கடைக்கு கொடுமுடி, எல்லையூர், ஏமானூர், தாமரைப்பாளையம், கரட்டாம்பளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக அளவிலான மதுப் பிரியர்கள் வந்து செல்கின்றனர். இதனால், பெண்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் மதுக் கடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு மாவட்ட மண்டல மதுக் கடை மேலாளர் லியாகத், பெருந்துறை சரகம் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், கொடுமுடி காவல் துறை ஆய்வாளர் மகாலிங்கம் ஆகியோர் காலிங்கராயன் மதகு பாசன சபை செயலாளர் செல்வகுமார், வழக்குரைஞர் கார்த்திகேயன், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
அதில், மதுக் கடையை 2 மாதங்களுக்குள் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வதாக மதுக் கடை மேலாளர் லியாகத் உறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.