கோபி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறையில் நடைபெறவுள்ளது.
இக்கல்லூரியில் 8 பாடப் பிரிவுகளின்கீழ், 440 மாணவ, மாணவிகள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்படவுள்ளனர். இவ்விடங்களுக்கான கலந்தாய்வில் 2,100 மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.
முதல்கட்டமாக விளையாட்டு, என்.சி.சி., ராணுவம், சுதந்திர போராட்ட வாரிசுகள், மாற்றுத் திறனாளி உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு மே 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கவுள்ளது.
பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிப்பொறியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மே 29-ஆம் தேதியும், பி.ஏ. பொருளாதாரம், பி.காம், பி.பி.ஏ., பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மே 30-ஆம் தேதியும் நேரடிச் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
மதிப்பெண்கள், இடஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வில் மாணவ, மாணவிகளுக்கு அன்றைய தினமே பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை உறுதி செய்யப்படும். எனவே, விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களின் மதிப்பெண் பட்டியல், பிற சான்றிதழ்களுடன் தங்களது பெற்றோர் அல்லது பொறுப்பாளருடன் தவறாது காலை 8 மணிக்கு வருகைதந்து கலந்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் ஆர்.செல்லப்பன் கூறுகையில், கலந்தாய்வு காலை 9 மணி முதல் நடைபெறும். அரசு விதிமுறைகளின்படி மாணவ, மாணவிகளின் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்றார்.