அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவியருக்கும் திருக்குறள் புத்தகங்கள் இலவசமாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் திருக்குறளைக் கற்கும் வகையில் அறத்துப்பால், பெருட்பாலில் உள்ள 105 அதிகாரங்களையும் பயிற்றுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் ஒவ்வோர் வகுப்பிலும் தலா 15 அதிகாரங்கள் பயிற்றுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை ஊக்குவிக்கும் வகையில் அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியருக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பங்களாபுதூர் மாஸ்டெக் சமூக நல அறக்கட்டளை இப்புத்தகங்களை இலவசமாக வழங்கியது.
பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் த.செல்வராஜ், மாணவியருக்குப் புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து, தமிழ் மன்றம் மூலம் அனைத்து மாணவியருக்கும் திருக்குறள் கற்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.