பெருந்துறை அருகே ஓடும் லாரியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், கள்ளியம்புதூரில் பல தறி கிடங்குகள் உள்ளன. இங்கிருந்து வேட்டி - துண்டு பாரம் ஏற்றிக் கொண்டு கேரளத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை லாரி புறப்பட்டுள்ளது. லாரியை அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் ஓட்டியுள்ளார்.
பெருந்துறை, சிப்காட் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியில் எரிந்த ஒரு லைட்டிலிருந்து கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறந்து வேட்டி - துண்டு மீது விழுந்து அதிகாலை 3.30 மணியளவில் தீப்பிடித்தாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட ஓட்டுநர் சுரேஷ் லாரியை உடனடியாக ஓரமாக நிறுத்தி, இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், லாரியில் இருந்த வேட்டி, துண்டுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. லாரியின் பின்பகுதியும் எரிந்து சேதமடைந்தது.
இச்சம்பவம் குறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.