சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
அறச்சலூரை அடுத்த பள்ளியூத்து, மேட்டூர்மந்தைச் சேர்ந்த கருப்பணன் மகன் அஜீத்குமார் (21). இவரது நண்பர் சேதுபதி (21). இவர்கள் இருவரும் பெருந்துறையில் உள்ள லாரிக்கு பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
திங்கள்கிழமை காலை வழக்கம்போல் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு பெருந்துறை நோக்கி வந்தனர். வாகனத்தை அஜீத்குமார் ஓட்டிச் சென்றார். சேதுபதி பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளார். வெள்ளோடு - அறச்சலூர் சாலையில், காரைவாய்க்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து, வெள்ளோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.