நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி ஈரோடு எண்ம நூலக (டிஜிட்டல் நூலகம்) வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் 50-ஆது தேசிய நூலக வார விழாவையொட்டி, ஈரோடு சம்பத் நகரில் உள்ள நவீன நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு "அறிவு வளர்ச்சிக்கு நூலகம்' என்ற தலைப்பிலும், 9 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "வாசிப்பு நம் சுவாசிப்பு' என்ற தலைப்பிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு "நூல்கள் சுமை அல்ல சுவை' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கிளை நூலகர் சுந்தரராஜன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.
அறக்கட்டளைத் தலைவர் மாரியப்பன், வாசகர் வட்டத் தலைவர் ரவீந்திரன், துணைத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நவீன நூலகத்தின் நிலை நூலகர் ஷீலா நன்றி கூறினார்.