பவானி நகராட்சியில் ரூ. 85.75 லட்சத்தில் குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி குப்பைக் கிடங்கு வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஆணையர் ஆர்.மகேஸ்வரி தலைமை வகித்தார். திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.சத்யபாமா முன்னிலை வகித்தார். நகராட்சிப் பொறியாளர் என்.சிவகுமார் வரவேற்றார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைத்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 30 லட்சம், மாநில அரசு ரூ. 47 லட்சம், நகராட்சி நிதியாக ரூ. 9 லட்சம் செலவிடப்படுகிறது. இதன் மூலம், நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படும்.
இதில், ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, ஈகோ பிரஸ் தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், துணைத் தலைவர் கே.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.