ஈரோடு அருகே ரங்கம்பாளையத்தில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே ரங்கம்பாளையம் இரணியன் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் (32). இவருக்கு சுதா (24) என்ற மனைவியும், ஹரிணி (5), ஹாசினி (2) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கணவன், மனைவி இருவரும் குடும்பத்துடன் தங்கியிருந்து தோட்டத்து வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹரிணி பள்ளிக்குச் சென்ற நிலையில் சுதாவும், ஹாசிணியும் வியாழக்கிழமை வீட்டில் இருந்துள்ளனர்.
குழந்தை ஹாசினி அங்கு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தோட்டத்து கிணற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஹாசினி தவறி 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதைப் பார்த்த சுதா அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை மீட்கப் போராடினர். ஆனால், குழந்தை ஹாசிணி நீரில் மூழ்கி உயிரிழந்தார். சுமார் அரைமணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் இறந்த நிலையில் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
இதுகுறித்து, ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.