காகித பாரம் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப் பாதையில் 3 மணி நேரம் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம், கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் பாதை உள்ளது. 27 கொண்டை ஊசிகள் கொண்ட இந்த மலைப் பாதை வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு காகித பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.
லாரியை ஓட்டுநர் கனகராஜ் ஓட்டினார். திம்பம் 27-ஆவது வளைவில் திரும்பும்போது லாரி பழுதாகி நின்றது. இதனால், தமிழகம் கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் மீட்பு வாகனம் மூலம் லாரியை சற்று நகர்த்தினர். இருசக்கரம், சிறிய கார் போன்ற வாகனங்கள் மட்டுமே இயங்கின.
பேருந்துகள், சரக்கு வாகனங்கள், சுற்றுலா வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு கனரக வாகன பணிமனை பணியாளர்கள் லாரியின் பழுதை நீக்கியதையடுத்து மீண்டும் இயல்பு நிலை திரும்பியது.