கொடுமுடி 1-ஆவது வார்டில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்: சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை

கொடுமுடி பேரூராட்சி 1-ஆவது வார்டில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொடுமுடி பேரூராட்சி 1-ஆவது வார்டில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து,பொது மக்கள் சார்பில் ஊர்த் தலைவரும் சமூக ஆர்வலருமான மா.ஆறுமுகம், அப்பகுதியைச் சேர்ந்த சி.சண்முகசுந்தரம் ஆகியோர் கூறியதாவது:
கொடுமுடி பேரூராட்சி,  1-ஆவது வார்டு, நகப்பாளையம் அருந்ததியர் காலனி பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளைத் தரம் பிரித்து வாங்கும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படமால் மலைபோல குவிந்துள்ளன.
 இப்பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோயில் முன்பு குப்பைகள் மலைபோல தேங்கிக் கிடக்கின்றன. பிளாஸ்டிக் பொருள்கள்,  உணவு, மாமிசக் கழிவுகள் அகற்றப்படாததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதிக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் பணியாளர்களை நியமித்து குப்பைகளைத் தரம் பிரித்து வாங்க வேண்டும்.
வீரமாத்தியம்மன் கோயில் முன்பு மலைபோல குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவேண்டும். கழிவு நீர் வடிகால்களில் தேங்கும் குப்பைகளை அகற்றி கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டும்.
 எங்கள் பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு, தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com