சேதமடைந்த கொப்பு வாய்க்கால்களை சீரமைப்பதற்கு கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுந்தப்பாடியில் கீழ்பவானி முறைநீர்ப் பாசன விவசாயிகள் சபை பகிர்மான கமிட்டி பொதுக்குழு, விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் தலைவர் லோகநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பு துணைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
கூட்டத்தில், கசிவுநீர்த் திட்டங்களுக்குப் பராமரிப்பு நிதி ஒதுக்கி தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும். கொப்புவாய்க்கால் சேதமடைந்ததால் கடைமடை பகுதி பாசனங்களுக்கு நீர் கிடைப்பதில்லை. வேளாண் பொறியியல் துறை மூலம் சீரமைப்பு செய்ய வேண்டும். பிரதான வாய்க்கால்களில் நீர் அளவு தொட்டி அமைத்து அளவுகோல் புதிதாக அமைக்க வேண்டும். வாய்க்காலின் இருபுறமும் துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள மரங்களுக்குப் பதிவு எண் இட வேண்டும். சாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.