தமிழக வனப் பகுதியில் கிடைத்த நீர்வரத்தால் நிரம்பிய கர்நாடக அணை: உபரி நீரை தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடக மக்கள் எதிர்ப்பு

தமிழக வனப் பகுதியில் இருந்து கிடைத்த நீர்வரத்தால் நிரம்பிய கர்நாடக அணையில் இருந்த உபரி நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வனப் பகுதியில் இருந்து கிடைத்த நீர்வரத்தால் நிரம்பிய கர்நாடக அணையில் இருந்த உபரி நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம்,   கர்நாடக எல்லையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்  தலமலை, தாளவாடி வனச் சரகங்கள் அமைந்துள்ளன. இருமாநில எல்லையில் அமைந்துள்ள மலைத் தொடர்களில் பெய்யும் மழைநீர் வடக்குப் புறமாக தமிழகத்தைச் சேர்ந்த பவானிசாகர் அணைக்கும், தெற்குப் புறமாக தமிழக வனத்தின் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கலோஅணைக்கும் செல்கிறது.
சிக்கலோ அணை தமிழக வனத்தையொட்டி, கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  தமிழக வனப் பகுதி வழியாக கர்நாடகத்துக்கு வீணாகச் செல்லும் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்தி தடுப்பணைகள் கட்டாததால் வெள்ளநீர் இரு மாநில எல்லையில் அமைந்துள்ள  சிக்கலோ அணையைச் சென்று சேர்கிறது. கடந்த சில நாள்களாக தமிழக மலைத் தொடர்களான தாளவாடி, தலமலை, நெய்தாளபுரம், பெஜலட்டி பகுதிகளில் பெய்த மழை வெள்ளம் தாளவாடி பள்ளம் வழியாக சிக்கலோ அணையை சென்றடைந்தது.
இதையடுத்து, அதிக நீர்வரத்து காரணமாக சிக்கலோ அணை முழுகொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. இதனால்  உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் சட்டப் பேரவை உறுப்பினர்  புட்டு ரங்கநாயக்கர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிக்கலோ அணை நீர்த்தேக்கப் பகுதியை புதன்கிழமை பார்வையிட்டு, கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, அணைப் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 4 கதவணைகள் வழியாக 500 கன அடி தண்ணீரைத் தமிழகத்துக்கு திறந்துவிட்டனர். இந்த  உபரிநீர், பாலாறு வழியாக மேட்டூர் அணைக்கு வந்துசேரும்.
இந்நிலையில், தமிழகத்துக்கு உபரி நீரை திறந்துவிட்டதற்கு கர்நாடகப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சிக்கலோ அணைக்கு வந்த சாம்ராஜ் நகர் சட்டப் பேரவை உறுப்பினர் புட்டு ரங்கநாயக்கரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர், அதேபகுதியில் உள்ள வறண்ட குளங்களுக்குத் தண்ணீரைத் திருப்பிவிட ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com