கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் கொளப்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
எம்.ஆர்.எஸ். பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பள்ளிச் செயலர் எம்.ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பழனிவேலு பேசியதாவது:
சாலை பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 18 வயத்துக்கு உள்பட்டவர்கள் வாகனங்களை ஓட்டினால் அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுகுறித்து மாணவர்கள் பயிலும் பள்ளி நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பேரில், பள்ளி நிர்வாகமும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். திம்பம் மலைப் பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதைத் தொடர்ந்து ஆய்வு செய்தபோது வாகனங்கள் சட்டத்துக்குப் புறம்பாக மாறுதல் செய்யப்பட்டு இயக்கப்பட்டது தெரியவந்தது. மாறுதல் செய்யப்பட்ட 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதில், கோபி போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், பள்ளித் தாளாளர் கோமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.