தாளவாடி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளதால் குளங்கள், தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், காலி ஃபிளவர், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் சத்தியமங்கலம், ஈரோடு, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கும், கேரளத்துகும் கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் 60 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து 800 முதல் 1,000 அடி வரை சென்றுவிட்டது. வறட்சி காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் நீரின்றி கருகியதால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்நிலையில், தாளவாடி, தலமலை, நெய்தாளபுரம், ராமரணை, ஆசனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது தினமும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பள்ளங்கள்,
ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குளம், குட்டைகள், தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக, இத்தடுப்பணையைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.