மாக்கம்பாளையம் சாலையில் உள்ள இரு பள்ளங்களில் உயர்மட்டப் பாலம் கட்டவும், சாலை வசதி கோரியும் அப்பகுதி மக்கள், மாணவர்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்தில் கடந்த வாரங்களாக பெய்த பலத்த மழையால் கடம்பூர், மாக்கம்பாளையம் இடையே செல்லும் மாமரத்துப்பள்ளம், சர்க்கரைப்பள்ளம் ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தின்போது சாலையைக் கடந்த கிராம மக்கள் சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால், இப்பகுதியில் இரு வாரங்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
காட்டாற்று வெள்ள அபாய எச்சரிக்கையால் காலை, மாலை நேரங்களில் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாடகை சரக்கு வாகனங்கள் கூட வருவதில்லை.
கிராமத்தில் விளையும் காய்கறிகளை சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் காய்கறிச் சந்தைக்கு கொண்டு செல்ல முடியால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். சாலை போக்குவரத்து துண்டிப்பால் அருகியம், குரும்பூர், மாக்கம்பாளையத்தைச் சேர்ந்த 2,500 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அருகியம், குரும்பூர், மாக்கம்பாளையத்தைச் சேர்ந்த 200 பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை காலை வந்தனர். அங்கு சாலை வசதி கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாக்கம்பாளையம் கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள இரு பள்ளங்களில் உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி, வருவாய்த் துறையினர் பாலங்கள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.