காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் கணேஷ் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவு ஈரோடு, கருங்கல்பாளையத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு கணேஷ் வந்திருந்தார்.
சனிக்கிழமை மதியம் கணேஷும், அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். உடன் வந்த நண்பர்கள் கழிவறைக்குச் சென்ற நிலையில் கணேஷ் மட்டும் ஆற்றில் இறங்கி குளிக்கத் தொடங்கியுள்ளார்.
அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற கணேஷ் தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பதைப் பார்த்த நண்பர்கள் சப்தம் போட்டுள்ளனர். அருகில் இருந்த மீனவர்கள் சிலர் ஓடிவந்து ஆற்றில் குதித்து தேடினர். சிறிது நேரத்துக்குப் பிறகு கணேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருங்கல்பாளையம் போலீஸார், மாணவர் கணேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.