தங்கும் விடுதி தண்ணீர்த் தொட்டியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம்

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் என்பவரின் மகன் ஜெயகுமார் (26). இவர், ஈரோடு-மேட்டூர் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார். 3 நாள்களுக்கு முன் ஜெயகுமார் திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. தங்கும் விடுதி ஊழியர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாகக் கருதியுள்ளனர்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை விடுதியின் மேல்தளத்தில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. தண்ணீர்த் தொட்டியின் மேல் பகுதியைத் திறந்து பார்த்தபோது அங்கு ஜெயகுமார் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தகவலறிந்த வீரப்பன்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். தண்ணீர்த் தொட்டியில் விழுந்து ஜெயகுமார் தற்கொலை செய்துகொண்டாரா, யாரேனும் பிடித்துத் தள்ளிவிட்டதால் இறந்து போனாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயகுமாரின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய பிறகே அவர் இறந்ததற்கான காரணம் குறித்து தெரிய வரும் என வீரப்பன்சத்திரம் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com