பவானி, தேவபுரம் ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்குகள் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சித்திரை மாதத்தின் முதல்நாளை முன்னிட்டு பவானி கூடுதுறையிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதையடுத்து, உலகம் அமைதி பெறவும், நல்ல இல்லறத் துணை அமையவும், மழை பெய்து உலகில் வறட்சி நீங்கவும் வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அதிமுக நகரச் செயலர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா மாதுசாமி, தலைவர் மாதேஸ்வரன், துணைத் தலைவர்கள் சிந்துஜா, முருகேசன், துணைச் செயலர் பவானி எஸ்.கண்ணன், தேவபுரம் பகுதி மக்கள் செய்திருந்தனர்.