நல வாரியத் திட்டங்களை செயல்படுத்தக் கோரி சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு நல வாரிய அலுவலகம் அருகே சிஐடியூ ஈரோடு மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், அமைப்புசாரா, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அவற்றுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து, நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்களுக்கான உதவித் தொகையை வழங்க வேண்டும். நல வாரியங்களின் செயல்பாடுகளை முடக்கக் கூடாது. உறுப்பினர்களுக்கான பணப் பலன்கள், சலுகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். நல வாரிய பணப் பயன்களை இரட்டிப்பு செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த விலையில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஓய்வூதியம், நிலுவையில் உள்ள இயற்கை விபத்து நிவாரண உதவி, மகப்பேறு உதவி நிதிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கஸ்தூரி, ஜெகநாதன், ரகுராமன், அர்த்தநாரி உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.