கோபியில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் மதிப்பெண்கள் சரிபார்க்கும் அதிகாரி திடீரென திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கே.வி.கே. ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஏசுராஜ் (53). இவர், சத்தியமங்கலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தின் கண்காணிப்பாளராகவும், கோபி பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் மதிப்பெண்கள் சரிபார்க்கும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஏசுராஜ் விடைத்தாள் திருத்தும் மையத்தில் திங்கள்கிழமை மாலை படியில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது, திடீரென நிலை தடுமாறி படிக்கட்டில் தவறி விழுந்து மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் ஏசுராஜை உடனடியாக மீட்டு, கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஏசுராஜ் உயிரிழந்தார்.