பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 16 தமிழ்நாடு பட்டாலியன் சார்பில், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, கல்லூரி முதல்வர் உதயகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி ஆணையர் சீனிஅஜ்மல்கான் கலந்துகொண்டு பேரணியைத் தொடக்கிவைத்தார். இதில், லெப்டினென்ட் மேஜர் சுபேதார் ராஜசேகர், தேசிய மாணவர் படை அதிகாரிகள் நியாசுதீன், மைதிலி, சுரேஷ், கேப்டன் மகுடீஸ்வரன், சுபேதார் அண்ணாதுரை, முதல்நிலை அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தொடங்கிய பேரணியானது, வீரப்பன்சத்திரம், பாரதி திரையரங்கம், ஸ்வஸ்திக் கார்னர் வழியாகச் சென்று வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.