ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு உரிய அளவீடு செய்து உறுதி செய்யப்பட்ட பிறகே நீர்நிலைப் புறம்போக்குகளில் உள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நீர்நிலைப் புறம்போக்குகளில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஈரோடு மாநகராட்சி, வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மேல் முறையீட்டு மனு அளித்தனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன் கூறியதாவது:
ஏற்கெனவே, கதிரம்பட்டி, அணைக்கட்டு, அண்ணமார் பெட்ரோல் பங்க், சென்னிமலை சாலை, கனிராவுத்தர் குளம் ஆகிய பகுதிகளில் 1,800க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. தற்போது மூலக்கரை, ராயபாளையம், சின்னமேடு, புதுக்காலனி, காரப்பாறை, செங்கோடம்பள்ளம், தெற்குப்பள்ளம், வன்னியர் காலனி, வள்ளியம்மை நகர், ராமமூர்த்தி வீதி, பாரதிபுரம், பொய்யேரிக்கரை, கள்ளியங்காடு, கரிமேடு, பழைய பூந்துறை, மரப்பாளம், பிச்சைக்காரன் பள்ளம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 8 ஆயிரம் வீடுகளை இடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
எனவே, நீர்நிலைப் புறம்போக்கில்தான் வசிப்பிடம் உள்ளதா என்பதை உரிய முறையில் ஆய்வு செய்து உடனடித் தீர்வு காண தமிழக அரசு முன் வரவேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, எஸ்.சுப்பிரமணியன், பி.பழனிசாமி, கோமதி, நகரச் செயலாளர் சுந்தரராஜன், ஈரோடு தாலுகா செயலாளர் ராஜா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.