ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் எதிரே சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்துக் காவலர் பணியாற்றும் நிழற்குடை திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலருகே செல்லும் சாலையின் நடுவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸார் பணியாற்றும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையில் போலீஸார் அமர்ந்து போக்குவரத்து சிக்னலை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல நிழற்குடையில் ஊர்க் காவல் படை வீரர் சுதா ராணி என்பவர் திங்கள்கிழமை போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கர்நாடகத்தில் இருந்து நஞ்சை ஊத்துக்குளிக்கு மாட்டுத் தீவனம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக நிழற்குடையில் மோதியது.
இவ்விபத்தில் சுதா ராணி காயமடைந்தார். அதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கோவை மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்த பீட்டர் (78) என்பவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.