அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பாதையில் அரசுப் பேருந்தும், லாரியும் எதிரெதிரே மோதிக் கொண்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயமின்றி தப்பினர்.
பர்கூரிலிருந்து அந்தியூருக்கு சுமார் 75 பயணிகளுடன் ஒரு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இதேபோல, அந்தியூரிலிருந்து பர்கூருக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. பர்கூர் மலைப் பாதையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக லாரியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமானது. அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.